வாழ்க்கை என்ற நாணயத்திற்கு இன்பம் துன்பம் என்ற இரண்டு பக்கங்கள் உண்டு. துன்பம் வரும்போது அதன் இயல்பை விட அதிகமாகவே அது நம் மனதை தாக்குகிறது. அதன் மூலம் ஏற்படக்கூடிய கோபம், வலி,காயம்,அழுகை இவை அனைத்துமே நம்மை பாதிக்கின்றன.
இந்த நிலையை தான் நாம் உணர்ச்சிவசப்படுதல் என்று கூறுகிறோம். ஆனால் அவை நம் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இத்தகைய உணர்ச்சி குறைபாடுகளை எப்படி சமாளிக்கலாம் என்று பார்ப்போம் .
யதார்த்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் உணர்ச்சிகளுக்கு ஒரு கால அவகாசத்தை நிர்ணயுங்கள். சோகம், கோபம் அல்லது விரக்தியில் இருந்தால் இந்த உணர்வுக்கான நேரம் இந்த ஒரு நாள் மட்டும் தான் என்று நினைத்து கொள்ளுங்கள். அந்த நாள் முடிந்தவுடன் உங்கள் நேற்றைய மனநிலைக்கு முற்று புள்ளி வைத்து நீங்கள் உங்கள் தினசரி வேளைகளில் முன்னேறத் தொடங்குங்கள் .
நேற்றைய பிரச்சனைக்கான காரணத்தை ஆராய்ந்து எதிராளியின் மோசமான நடத்தைக்கு உங்கள் தரப்பில் என்ன காரணங்கள் இருக்கலாம் என்பதை உணர்ந்து மீண்டும் அவ்வாறு நடக்காமல் இருக்க உங்கள் மனதை தயார் படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் சக்தி அதிகமாவதை நீங்கள் உணர முடியும்.

உடற்பயிற்சி அல்லது மற்ற உடல் சார்ந்த செயல் பாடுகளால் மன அழுத்தங்களை உருவாக்கும் ஹார்மோன்களின் வளர்ச்சி குறைகிறது. என்டோர்பின் அல்லது மகிழ்ச்சியை உருவாக்கும் ஹார்மோன்கள் அதிகரிக்கிறது. உடற்பயிற்சி செய்வது கவனச்சிதறல் இல்லாமல் உங்களை கவனம் செலுத்துவதற்கு நேரம் கொடுக்கிறது.
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு கருவியை பயன்படுத்த வேண்டும். அது வரைவது, எழுதுவது இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம் உணர்வுகளை உள்ளுக்குள்ளேயே சேமித்து வைப்பதால் வலியும் வேதனையும் அதிகமாகும். அதனை வேறு முறையில் ஆக்கபூர்வமாக வெளியில் கொட்டும் போது அதன் சுமை குறைந்து மனம் லேசாகும்.
உஜெயி,அனுலோம், விலோம் போன்றவை மூச்சு பயிற்சியின் வகைகளாகும். இத்தகைய மூச்சு பயிற்சிகள் மனதை அமைதியுடன் வைக்கிறது. இந்த பயிற்சிகளின் மூலம் நம் உணர்வுகளை கட்டுப்படுத்துவது எளிதாகிறது. மீண்டும் உணர்ச்சி வசப்படுவது உயர்வதை தடுக்கிறது.

உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருக்கும் போது தனிமை அந்த நிலையை இன்னும் மோசமாக்கும். அதற்கு பதிலாக உங்கள் எண்ணங்களை பகிர்வதற்கு ஒரு சிறந்த துணையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் பிரச்சனைக்கு ஒரு புது முன்னோக்கு கிடைக்கலாம்.
இரு புறத்திலும் பாருங்கள்: எந்த ஒரு நிகழ்வும் முற்றிலும் மோசமானதாக இருக்கவே முடியாது. ஒரு நிகழ்வின் நல்ல மற்றும் கெட்ட பக்கங்களை ஆராய்ந்து பாருங்கள். இது உங்கள் இழப்பைக் குறைக்க உதவுவதோடு, சிக்கலை விட்டு விடுவதையும் எளிதாக்கும்.
உங்கள் மனதை நெருடி கொண்டிருக்கும் செயலில் இருந்து முற்றிலும் விலகி வேறு ஒரு செயலை செய்ய முற்படுங்கள். அது ஒரு விளையாட்டாக இருக்கலாம் அல்லது ஒரு சிறு பயணமாக இருக்கலாம். உறவுகளில் பிரச்னை இருந்தால், நண்பர்களுடன் பொழுதை கழிக்கலாம்.புத்தகங்கள் கூட வாசிக்கலாம். இதனால் நமது மனம் வேறு பாதையில் பயணப்படும். இதன் மூலம் ஒரு தெளிவு கிடைக்கும்.

உங்கள் கோபம் அல்லது விரக்தி அந்த நபர் அல்லது நிகழ்வை காட்டிலும் மோசமானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் மன உளைச்சலுக்கு காரணமான நபரையோ அல்லது நிகழ்வையோ ஒரு பொருளாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அது உங்கள் கண் முன்னே உருகுவதை போல் கற்பனை செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் மனம் சமன் அடையும்.
உங்களை சுற்றியுள்ள இடத்தை சுத்தம் செய்யுங்கள் . அது உங்கள் அறையாகவோ அல்லது உங்கள் மேசையாகவோ இருக்கலாம். அவற்றை ஒழுங்கு படுத்துவதில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். இதன் மூலம் உங்கள் மன உளைச்சல் காணாமல் போகும்.
No comments:
Post a Comment