சமீப காலமாக சமூக வலைத்தளங்களான முக நூல், டிவிட்டர் போன்ற தளங்களிலும், வாட்ஸாப் போன்ற பகிர்வு தளங்களிலும் ஒரு அரிசி அலை அடித்து தற்போது ஓயத் தொடங்கி இருக்கிறது.
நாம் சமைத்து உண்ணும் அரிசி பிளாஸ்டிக் அரிசியா ? என்கிற ஒரு பகீர் கேள்வி தான் அது. தற்போது இது சார்ந்த பதிவுகளும், பகிர்வுகளும் குறைந்து இருந்தாலும் பலருக்கு இதற்கான கேள்விகள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
நமக்கும் இருந்த பிளாஸ்டிக் அரிசி சார்ந்த இந்த கேள்விகளுக்கு பதில்களைத் தேடினோம். நாம் சேகரித்த விவரங்களை இங்கே தருகிறோம். இதை பகிர்வதன் மூலம் நமது வாசகர்களுக்கு பிளாட்டிக் அரிசி பற்றியான சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறோம்.
7 ஆண்டுகளுக்கு முன் :
பிளாஸ்டிக் அரிசி என்பது முதன் முதல் ஏழு வருடங்களுக்கு முன் 2010 இல் சீனா வில் இருந்து தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பற்றியான அதிகார பூர்வ செய்திகள் 2 மட்டுமே இந்த ஏழு வருடங்களில் வந்திருக்கிறது.

பெயர் வந்த காரணம் :
1. "தி கொரியா டைம்ஸ்" எனும் பத்திரிகை 2011 ஆண்டில் சீன நாட்டின் ஷங்க்சி மாநிலத்தில் உள்ள தையூன் எனும் இடத்தில் பிளாஸ்டிக் அரிசி எனப்படும் போலி அரிசி விற்கப்படுகிறது என செய்திகள் வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த பிளாஸ்டிக் அரிசி உருளைக் கிழங்கு மற்றும் பிளாஸ்டிக்கின் கலவை கொண்டு உருவாக்கப்படுகிறது என கூறப்பட்டது. இதனாலேயே இந்த போலி அரிசிக்கு பிளாஸ்டிக் அரிசி என பெயர் வந்திருப்பதாக கூறப்பட்டது.

ஆப்பிரிக்காவில் இறக்குமதி?
2. இரண்டாவதாக, பிபிசி செய்தி நிறுவனத்திடமிருந்து 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நைஜீரியாவிற்கு கப்பல் மூலம் பிளாஸ்டிக் அரிசி, 2.5 டன் எடையுடைய ஒரு மிகப்பெரிய சரக்காக கப்பலில் வந்தடைந்ததாக கூறப்பட்டது.
இது நைஜீரியா துறைமுக சுங்கத்துறை பறிமுதல் செய்ததாகவும் தகவல்கள் வந்தது. ஆனால் பிறகு "நைஜீரிய தேசிய உணவு மற்றும் மருந்துகளுக்கான நிறுவனம்" தாம் பறிமுதல் செய்தது பிளாஸ்டிக் அரிசி இல்லை என்றும் அவை பூச்சி, புழுக்கள் பிடித்து கெட்டுப் போன நல்ல அரிசி தான் எனவும் விளக்கம் கூறியது.
மேலே குறிப்பிட்ட இந்த செய்திகள் தான் தற்போது வரை பிளாஸ்டிக் அரிசிகள் பற்றி மிகப் பிரதான ஊடங்கங்களில் வந்த இரண்டு செய்திகள்.
இந்த இரண்டைத் தகவலைத் தொடர்ந்து காட்டு தீயைப் போல பிளாஸ்டிக் அரிசியைப் பற்றிய தகவல் பரவுவதற்கு சமூக வலைத்தளங்கள் தான் காரணம்.

இந்தியாவில் இருக்கிறதா?
இதற்கு நமக்கு இதுவரை சரியான பதில் இல்லை. ஏனென்றால் இதுவரை அப்படிப்பட்ட அரிசி இந்த ஏழு வருடங்களாக இந்திய உள்பட எங்கும் பிடிபடவில்லை.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தமிழகம், தில்லி, கர்னாடகம், தெலுங்கானா, போன்ற பல மாநில அரசுகளுக்கு, பல இடங்களில் குறிப்பாக உணவு விடுதிகளில் பிளாஸ்டிக் அரிசி பயன்பாடு அதிகளவில் இருக்கிறதென்று பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இருந்தும் எந்த புகாரும் தற்போது வரை உண்மை என்று நிரூபிக்கப் படவில்லை.
No comments:
Post a Comment